அல்லாஹ்வின் கையில் உங்கள் தர்மம்

உங்கள் தர்மம் தேவையுள்ளவரின் கையைச் சென்றடைவதற்கு முன்பே, அல்லாஹ்வின் கையில் அது சென்று அடைந்து விடுகிறது.

தர்மம் என்பது நம் கையிலிருந்து மற்றொருவரின் கைக்கு நடைபெறும் பணப் பரிமாற்றம் என்று பலர் நினைப்பதுண்டு. ஆனால் தர்மத்தை பற்றி பேசும் பொது, அல்லாஹ் குர்ஆனில் என்ன சொல்கிறான் தெரியுமா?

உங்கள் தர்மம் தேவையுள்ளவரின் கையைச் சென்றடைவதற்கு முன்பே அல்லாஹ் அதை வாங்கிக்கொள்கிறான். இதை சிந்தித்து பார்த்தால், நாம் தர்மத்தைப் பார்க்கும் விதத்தையே இது மாற்றிவிடும். தர்மம் அல்லாஹ்விடத்தில் எவ்வளவு உயர்ந்த நற்செயல் என்பதை இது நமக்கு காட்டுகிறது.

அல்லாஹ் கூறுகிறான்:

நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களிடமிருந்து பாவமன்னிப்பை ஏற்றுக்கொள்கிறான் என்பதையும், தர்மங்களை அவன் (நேரடியாக) வாங்கிக்கொள்கிறான் என்பதையும் அவர்கள் அறியவில்லையா?

குர்ஆன் 9:104

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) இந்த வசனத்தை ஓதிவிட்டு இவ்வாறு கூறினார்கள்:

நிச்சயமாக, தர்மமானது யாசகரின் கையில் விழுவதற்கு முன்பே அல்லாஹ்வின் கையில் விழுந்து விடுகிறது.

தஃப்சீர் இப்னு கதீர் 9:104

நன்மை வளர்கிறது

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் ஹலாலான வருமானத்தில் ஒரு பேரீச்சம் பழத்தின் மதிப்புக்கு தர்மம் செய்தால் – அல்லாஹ் பரிசுத்தமானவற்றைத் தவிர வேறெதையும் ஏற்றுக் கொள்வதில்லை – அதை நிச்சயமாக அல்லாஹ் தன்னுடைய வலது கையால் ஏற்று, உங்கள் குதிரைக் குட்டியை நீங்கள் வளர்ப்பது போல, அதன் நன்மையை மலைபோல் உயரும் அளவுக்கு வளர்த்து விடுவான்!

புகாரி # 1410

இந்த ஹதீஸ் இரண்டு விஷயங்களைத் தெளிவாகக் கற்பிக்கிறது:

  • தர்மம் சிறிய அளவில் இருப்பதும் அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது
  • தர்மத்தின் கூலி மிகப் பெரியதாக இருக்கும்

தர்மத்தை சிறந்த முறையில் செய்வது எப்படி?

ஹலாலான சம்பாத்தியத்திலிருந்து தர்மம் கொடுங்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மக்களே, நிச்சயமாக அல்லாஹ் தூய்மையானவன்; அவன் தூய்மையானதைத் தவிர வேறெதையும் ஏற்றுக்கொள்வதில்லை.

ஸஹீஹ் முஸ்லிம் # 1015

தூய்மையான எண்ணத்துடன் கொடுங்கள்

புகழுக்காகவோ, பிறரிடம் நற்பெயர் கிடைக்க வேண்டும் என்பதற்காகவோ தர்மம் செய்யாதீர்கள்.

தர்மத்தில் கொடுக்கப்படும் சிறிய தொகையை ஒருபோதும் குறைவாக மதிப்பிடாதீர்கள்

தர்மத்தில் கொடுக்கப்படும் ஒரு பேரீச்சம்பழம் கூட ஒரு மலையளவு நன்மையை பெற்றுத் தரும்.

அல்லாஹ் கூறுகிறான்:

அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வங்களை தர்மம் புரிபவர்களின் உதாரணம், ஏழு கதிர்களை முளைக்க வைத்த ஒரு விதையின் உதாரணத்தைப் போன்றாகும். ஒவ்வொரு கதிரிலும் நூறு விதைகள் வந்தன. அல்லாஹ், தான் நாடுபவர்களுக்கு (நற்கூலியை)ப் பன்மடங்காக்குகிறான். அல்லாஹ் விசாலமானவன், நன்கறிந்தவன் ஆவான்.

குர்ஆன் 2:261

முடிவுரை

பிறர் உங்கள் தர்மத்தை பெற்றுக் கொள்ளும் முன்பு, அல்லாஹ் பெற்றுக்கொள்கிறான். நேர்மையான சம்பாத்தியத்தில், தூய்மையான எண்ணத்துடன் கொடுக்கப்படும் தர்மத்தை, அல்லாஹ்வே ஏற்று அதன் கூலியை வளர்க்கிறான். எனவே, இப்பொழுதே கொடுங்கள். மறைவாகக் கொடுங்கள். அல்லாஹ்வுக்காகக் கொடுங்கள்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)

அல்லாஹ் தர்மத்தை பெற்றுக்கொள்கிறான் என்று எந்த வசனம் கூறுகிறது?

ஸூரத்துத் தவ்பாவின் 9:104-வது வசனம்: “…மேலும் அவன் தர்மங்களை பெற்றுக்கொள்கிறான்.” என்று கூறுகிறது.

அல்லாஹ் தனது வலது கையால் தர்மத்தை ஏற்றுக்கொள்வது பற்றிய ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா?

ஆம். இது புகாரி (# 1410) மற்றும் ஸஹீஹ் முஸ்லிம் (# 1014) ஆகிய நூல்களில் பதிவாகியுள்ளது.

இஸ்லாத்தில் சிறிய தொகையாக கொடுக்கப்படும் தர்மம் பற்றிய நிலைப்பாடு என்ன?

ஆம். நேர்மையான சம்பாத்தியத்திலிருந்து கொடுக்கப்படும் ஒரு பேரீச்சம்பழம் கூட, மலையளவு கூலியாக மாறும் வரை வளர்க்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

ஒரு தர்மம் அல்லாஹ்விடம் ஏற்றுக்கொள்ளப்பட எது அவசியம்?

தர்மம் அல்லாஹ்விடம் ஏற்றுக்கொள்ளப்பட, அது அனுமதிக்கப்பட்ட (ஹலால்) சம்பாத்தியத்திலிருந்து இருக்க வேண்டும், தூய்மையான எண்ணத்துடன் (இக்லாஸ்) வழங்கப்பட வேண்டும்.

மேலும் படிக்க

WHAT OTHERS ARE READING

Most Popular