இந்திய முஸ்லீம்களுக்கு தேசப்பற்று உண்டா?

இந்தியாவா பாகிஸ்தானா என்று தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இருந்தபோது பெரும்பான்மையான (கோடிக்கணக்கான) முஸ்லிம்கள், இந்தியாவை தேர்ந்தெடுத்து இந்தியாவிலேயே தங்க முடிவு செய்தனர். இந்திய முஸ்லீம்களின் தேசபக்திக்கு இதைவிட சிறந்த சான்று இருக்க முடியுமா?

இந்திய முஸ்லீம்களுக்கு தேசபக்தி இல்லை என்று பலர் நினைக்கிறார்கள். எல்லா இந்திய முஸ்லீம்களும் தேச துரோகிகள் என்ற ஒரு தோற்றத்தை உருவாக்க சிலர் முயல்கிறார்கள். உண்மை என்ன? வாருங்கள், கண்டறியலாம்.

இந்திய முஸ்லீம்களின் தேசபக்திக்கு ஆதாரம்

தாங்கள் தேச பற்று மிக்கவர்கள் என்று இந்திய முஸ்லிம்ககளால் மட்டுமே ஆதாரத்துடன் நிரூபிக்க முடியும். எப்படி என்று நீங்கள் கேட்கலாம்.

இந்தியாவா பாகிஸ்தானா என்று தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இருந்தபோது பெரும்பான்மையான (கோடிக்கணக்கான) முஸ்லிம்கள், இந்தியாவை தேர்ந்தெடுத்து இந்தியாவிலேயே தங்க முடிவு செய்தனர். இந்திய முஸ்லீம்களின் தேசபக்திக்கு இதைவிட சிறந்த சான்று இருக்க முடியுமா?

இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்களிப்பு

இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்களிப்பு

நமது நாட்டின் சுதந்திரப் போராட்டத்திற்காக பல முஸ்லிம்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர்.

உங்களுக்கு தெரியுமா?

பகத்சிங்கின் வழக்கறிஞர் ஒரு முஸ்லிம்

குண்டு வீசியதற்காக பகத்சிங், சுக்தேவ் மற்றும் ராஜ்குரு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஒரு முக்கிய வழக்கறிஞரும், சுதந்திரப் போராட்ட வீரருமான ஆசஃப் அலி, நீதிமன்றத்தில் அவர்களுக்காக வாதாடினார்.

‘ஜெய் ஹிந்த்’ என்ற முழக்கத்தை உருவாக்கியது ஒரு முஸ்லிம்

நேதாஜி சுபாஷ் சந்திர போஸால் பரவலாகப் பிரபலப்படுத்தப்பட்ட “ஜெய் ஹிந்த்” என்ற முழக்கம், ஜைன்-உல் அபிதீன் ஹசன் என்ற முஸ்லிம் சுதந்திரப் போராட்ட வீரரால் உருவாக்கப்பட்டது. நேதாஜி நிறுவிய இந்திய தேசிய ராணுவத்தில் (INA) தளபதியாகவும் இவர் பணியாற்றினார்.

மௌலானா அபுல் கலாம் ஆசாத்: இந்திய கல்வியின் சிற்பி

சிறந்த அறிஞரும், சுதந்திரப் போராட்ட வீரருமான மௌலானா அபுல் கலாம் ஆசாத், அசைக்க முடியாத தேசபக்தி மற்றும் தேசிய ஒற்றுமையின் அடையாளமாக இருந்தார். இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக 1947 முதல் 1958 வரை 11 ஆண்டுகள் அந்தப் பதவியை வகித்தார்.

நாட்டின் நவீன கல்வி முறைக்கு அவர் தான் அடித்தளமிட்டார். பல்கலைக்கழக மானியக் குழு (UGC), இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் (IITகள்) மற்றும் சாகித்ய அகாடமி போன்ற முக்கிய நிறுவனங்களை நிறுவுவதில் அவரது தொலைநோக்குப் பார்வை முக்கிய பங்கு வகித்தது.

மௌலானா ஆசாத் ஒரு தீவிர தேசபக்தி கொண்ட இந்தியர். அவர் மத அடிப்படையில் இந்தியாவைப் பிரிக்கும் யோசனையை நிராகரித்தார். அவர் கூறியதை நீங்களே படித்துப் பாருங்கள்.

ஒரு தேவதூதன் சொர்க்கத்திலிருந்து இறங்கி வந்து 24 மணி நேரத்தில் உனக்கு சுதந்திரம் பெற்றுத் தருகிறேன், ஆனால் இந்து முஸ்லிம் ஒற்றுமையை விட்டு விடு என்று சொன்னால், நான் மறுத்து விடுவேன். ஏனெனில், சுதந்திரம் பெறுவதில் தாமதம் இந்தியாவிற்கு இழப்பு தான். ஆனால், இந்து முஸ்லிம் ஒற்றுமையை இழப்பது மனித குலத்திற்கே இழப்பாகும்.

மௌலானா ஆசாத்

சாரே ஜஹான் சே அச்சா, இந்துஸ்தான் ஹமாரா

“சாரே ஜஹான் சே அச்சா, இந்துஸ்தான் ஹமாரா” என்ற பிரபலமான தேசபக்தி பாடல் இந்தியாவின் சுதந்திர இயக்கத்தின் கீதமாக ஒலித்தது. இந்த காலத்தால் அழியாத பாடலை அல்லமா முகமது இக்பால் என்ற முஸ்லிம் கவிஞர் தான் எழுதினார். இந்தப் பாடல் மத, பிராந்தியங்களை கடந்து, தேசிய ஒற்றுமையின் அடையாளமாக மாறியது.

இந்திய இராணுவம் மற்றும் கடற்படை இசைக்குழுக்கள் பின்வாங்கல் முரசறையின் போது (Beating Retreat) இன்றும் இந்த தேசபக்தி பாடல் இசைக்கப்படுகிறது.

இராணுவ இசைக்குழு “சாரே ஜஹான் சே அச்சா” பாடலை இசைக்கின்றனர்

ஆதாரம்: https://www.indiatoday.in/education-today/gk-current-affairs/story/muhammad-iqbal-facts-351021-2016-11-09

இந்திய சுதந்திர இயக்கத்தில் பல முஸ்லிம்கள் குறிப்பிடத்தக்க பங்காற்றினர். போராட்டத்தின் போது பேரணியாக மாறிய “வெள்ளையனே வெளியேறு” மற்றும் “சைமன், திரும்பிச் செல்” ஆகிய சக்திவாய்ந்த முழக்கங்களை உருவாக்கியவர் யூசுப் மெஹரலி என்ற முஸ்லிம் சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார்.

இதேபோல், ஷஹீத் பகத் சிங் மற்றும் எண்ணற்ற பிறரை ஊக்கப்படுத்திய “இன்குலாப் ஜிந்தாபாத்” என்ற முழக்கம் மௌலானா ஹஸ்ரத் மோஹானி என்ற முஸ்லிம் தலைவரால் உருவாக்கப்பட்டது.

இந்திய சுதந்திரத்தில் பங்களித்த முஸ்லிம்களின் பட்டியல்

இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்கு பங்களித்த முஸ்லிம்களின் பட்டியல் மிக நீண்டது. அந்த பட்டியலை ஒரு புத்தகமாக தொகுக்கக்கூடிய அளவில் அது நீண்டதாக உள்ளது. இந்திய சுதந்திரத்தில் பங்களித்த முஸ்லிம்களின் பட்டியலை, சாந்திமோய் ராய் என்பவர் ஒரு புத்தகமாக தொகுத்தார். “சுதந்திர இயக்கம் மற்றும் இந்திய முஸ்லீம்கள்” என்ற பெயரில் இந்தப் புத்தகம் தில்லியின் தேசிய புத்தக அறக்கட்டளையால் வெளியிடப்பட்டது.

இந்திய முஸ்லீம்களுக்கு தேசப்பற்று உண்டா?

ஜாலியன்வாலாபாக் தியாகிகள் பட்டியல்

சுதந்திர வரலாற்றில் மறக்க முடியாத மற்றும் கொடூரமான சம்பவங்களில் ஒன்று ஜாலியன் வாலாபாக் படுகொலை. இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு முஸ்லிம்களின் பங்களிப்பு குறித்து கேள்வி எழுப்புபவர்கள், அந்தச் சம்பவத்தில் உயிர்நீத்த தியாகிகளின் பட்டியலைப் பார்க்க வேண்டும்.

பஞ்சாபில் பணியாற்றிய பிரிட்டிஷ் அதிகாரிகள் ஜாலியன் வாலாபாக் படுகொலையில் இறந்த தியாகிகள் மற்றும் காயமடைந்தவர்களின் பட்டியலைத் தயாரித்தனர். பஞ்சாபில் உள்ள பிரிட்டிஷ் அரசாங்கத்தின் உள்துறைத் துறையின் நான்கு கோப்புகளில் இந்தப் பட்டியல் காணப்பட்டது. இந்தப் பட்டியல் இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் சீக்கியர்களின் பெயர்களால் நிரப்பப்பட்டுள்ளது.

ஜாலியன்வாலாபாக் தியாகிகள் பட்டியல்

ஆதாரம் : https://amritsar.nic.in/notice/honoring-the-martyrs-of-jallianwala-bagh/ (பஞ்சாப் அரசாங்க இணையதளம்)

ஜாலியன் வாலாபாக் சம்பவம், நமது நாட்டின் சுதந்திரத்திற்காக இந்துக்களும் முஸ்லீம்களும் எவ்வாறு ஒற்றுமையாகப் போராடினார்கள் என்பதை தெளிவாக காட்டுகிறது. இதுதான் தேசபக்தி! ஆங்கிலேயர்களுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதியவர்களின் நடவடிக்கைகளோடு இதை ஒப்பிட்டு பார்த்து, நீங்களே ஒரு முடிவுக்கு வாருங்கள்.

பார்க்க: https://thewire.in/history/bhagat-singh-and-savarkar-a-tale-of-two-petitions

இந்திய முஸ்லிம்கள் பாகிஸ்தானை நேசிக்கிறார்களா?

இந்திய முஸ்லிம்களில் பலர் பாகிஸ்தானை நேசிப்பதாக சிலர் நம்புகிறார்கள். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பாகிஸ்தானையும் இந்திய முஸ்லீம்களையும் தொடர்புபடுத்தும் முயற்சியை மேற்கொள்கிறார்கள். இஸ்லாம் காரணமாக இந்திய முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருப்பது போல் ஒரு பொய்யான பிம்பத்தை உருவாக்குகிறார்கள். “பாகிஸ்தானுக்குச் செல்லுங்கள்” என்று முஸ்லிம்களை பார்த்து அவர்கள் சொல்வதையும் நாம் காணலாம்.

இந்திய முஸ்லீம்கள் பாகிஸ்தானை மிகவும் நேசித்தால், அவர்கள் ஏன் இன்னும் இந்தியாவில் தங்கி, இந்திய நாட்டின் வளர்ச்சிக்காக வரி செலுத்த வேண்டும்? சற்று சிந்தித்து பாருங்கள்.

இந்தியாவில் உள்ள முஸ்லிம்களும், பாகிஸ்தானில் உள்ள முஸ்லிம்களும் இஸ்லாத்தை பின்பற்றுகிறார்கள் என்பது உண்மை தான். ஆனால், இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் இந்திய முஸ்லிம்கள், பாகிஸ்தானில் உள்ள முஸ்லிம்கள் பாகிஸ்தான் முஸ்லிம்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இஸ்லாத்தின் காரணமாக, ஒரு இந்திய முஸ்லீம் பாகிஸ்தானில் வாக்களிக்கவோ அல்லது நிலம் வாங்கவோ அல்லது பாகிஸ்தான் குடிமகனின் எந்த உரிமையையும் அனுபவிக்கவோ முடியாது. பாகிஸ்தான் விமானப்படையால் வீசப்படும் குண்டுகள், இந்திய முஸ்லிம்களை அவர்களின் இஸ்லாம் காரணமாக விட்டுவிடாது.

இதை புத்தியுள்ள எல்லா இந்திய முஸ்லிம்களும் நன்றாக புரிந்து வைத்துள்ளனர். எனவே இந்தியாவை மட்டும் தான் இந்திய முஸ்லிம்கள் ஆதரிக்கின்றனர்.

மதமும் தேசபக்தியும்

மதத்தையும் தேசப்பற்றையும் தொடர்புபடுத்துவது சரியல்ல. உதாரணத்திற்கு: நேபாளம் உலகின் ஒரே இந்து நாடு. எனவே, நேபாளம் இந்தியாவுடன் நட்பாக தான் இருக்கும் நீங்கள் நினைக்கலாம். உண்மை நிலை என்ன தெரியுமா? நேபாளம் பலமுறை இந்தியாவை அவமதித்துள்ளது. அது தொடர்பான சில தலைப்புச் செய்திகளைப் பார்ப்போம்.

1. “சீனாவுடன் கூட்டு ராணுவப் பயிற்சியை நடத்த இந்தியாவை நேபாளம் புறக்கணிக்கிறது”

ஆதாரம் : https://eurasiantimes.com/nepal-snubs-india-military-exercise-china/

2. “நேபாளம் இந்தியாவை புறக்கணிக்கிறது, எதிர்ப்புகளுக்கு மத்தியில் அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டது”

ஆதாரம்: https://timesofindia.indiatimes.com/world/south-asia/Nepal-snubs-India-adopts-constitution-amid-protests/articleshow/49034772.cms

3. “சீனாவுடன் நேபாளம் ரயில்வே ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதால், இந்தியாவுக்கு இமாலய அவமானம்”

ஆதாரம்: http://www.rediff.com/news/report/himalayan-snub-for-india-as-nepal-signs-railway-deal-with-china/20160321.htm

4. “நேபாள பிரதமர் இந்தியாவை புறக்கணித்து, முதலில் சீனாவுக்கு சென்றார்.”

ஆதாரம்: http://www.rediff.com/news/report/nepal-pm-snubs-india-to-visit-china-first/20151230.htm

இது போன்ற மேலும் பல தலைப்புச் செய்திகளை நீங்கள் காணலாம். இதிலிருந்து, இந்தியாவை விட நேபாளம் சீனாவை அதிகம் விரும்புகிறது என்பது தெளிவாக தெரிகிறது. நேபாளம் போன்ற இந்து நாடு இந்தியாவை புறக்கணித்து கம்யூனிஸ்ட் நாட்டை (சீனா) ஏன் ஆதரிக்கிறது? அரசியலுக்கும், தேச நலனுக்கும் உள்ள தொடர்பு தான் காரணம்! மதம் வேறு, தேச நலன் வேறு என்பது இப்போது உங்களுக்கு தெளிவாக புரிந்திருக்கும். இது இந்திய முஸ்லிம்களுக்கும் பாகிஸ்தானுக்கும் பொருந்தும்.

இந்திய முஸ்லிம்கள் மற்றும் கிரிக்கெட்

கிரிக்கெட்டில், இந்திய முஸ்லீம்கள் எப்போதும் பாகிஸ்தானை ஆதரிப்பதாகவும் அதனால் இந்திய முஸ்லிம்களுக்கு தேசப்பற்று இல்லை என்றும் பலர் நினைக்கிறார்கள். ஒரு விளையாட்டு தேசபக்திக்கான அளவுகோலாக இருக்க முடியாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

விளையாட்டு வீரர்கள் தங்கள் ஆர்வம் மற்றும் பணத்திற்காக விளையாட்டை விளையாடுகிறார்கள். விளையாட்டை பார்ப்பவர்கள், பொழுதுபோக்கிற்காகவும், கேளிக்கைக்காகவும் பார்க்கிறார்கள். கிரிக்கெட் விளையாடும் இதற்கு விதிவிலக்கு அல்ல.

தேசப்பற்றை அளவிட கிரிக்கெட் விளையாட்டு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏன் மற்ற விளையாட்டுகளை தேசப்பற்றோடு தொடர்புபடுத்துவது இல்லை? எஃப்1 கார் பந்தயத்தில் ஃபோர்ஸ் இந்தியாவுக்குப் பதிலாக ரெட் புல் அல்லது மெக்லாரன் மெர்சிடிஸை பல இந்துக்கள் ஆதரிக்கிறார்கள். இதனால், இந்த இந்துக்கள் தேசப்பற்றற்றவர்கள் என்று சொல்லலாமா?

பாகிஸ்தானோடு தொடர்புள்ள எல்லாவற்றையும் தவிர்க்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், நுஸ்ரத் ஃபதே அலி கான், அதிஃப் அஸ்லாம் மற்றும் பலரின் பாடல்களை விரும்பும் இந்து இசைப் பிரியர்களைப் பற்றி உங்களின் கருத்து என்ன? அவர்கள் எல்லோரும் தேசப்பற்று இல்லாதவர்களா? நுஸ்ரத் ஃபதே அலி கான், அதிஃப் அஸ்லாம் போன்றோரின் இசையை விரும்பும் இந்துக்கள் மீது அவர்கள் தேசப்பற்று இல்லாதவர்கள் என்ற விமர்சனம் எழுப்பப்படுகிறதா? ஏன் எழுப்பப்படுவதில்லை என்று நீங்கள் சிந்திக்க வேண்டும். இசை, விளையாட்டு, கலை போன்றவை எல்லா எல்லைகளுக்கும் அப்பாற்பட்டவை. தேசபக்தியை அளவிடுவதற்கான அளவுகோல்களாக அவை ஒரு போதும் இருக்கக்கூடாது.

தேசத்தைக் கட்டியெழுப்புவதில் இந்திய முஸ்லிம்களின் பங்கு

சுதந்திரப் போராட்டக் காலத்திலிருந்து நவீன இந்தியா வரை, இந்திய முஸ்லிம்கள் தங்கள் தேசபக்தியையும் தேசத்தின் மீதான அர்ப்பணிப்பையும் தொடர்ந்து நிரூபித்துள்ளனர். ஆயுதப்படைகள், சிவில் சர்வீசஸ், கல்வி, சுகாதாரம், கலைகள் மற்றும் வணிகம் உட்பட அனைத்து துறைகளிலும் இந்திய முஸ்லிம்கள் நமது தாய்நாட்டிற்கு தனித்துவத்துடன் சேவை செய்து வருகின்றனர்.

ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் இந்திய ஆயுதப்படைகளில் பெருமையுடன் சீருடை அணிந்து, நாட்டின் எல்லைகளைப் பாதுகாத்து, அதன் இறையாண்மையை காத்து வருகின்றனர். முஸ்லிம் விஞ்ஞானிகள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் இந்தியாவின் முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் தினமும் பங்களிக்கின்றனர். அவர்களின் செயல்கள் நமது நாட்டின் மீதான அவர்களின் அசைக்க முடியாத தேசப்பற்றை பறைசாற்றுகிறது.

முடிவுரை

மக்களுக்கு மத்தியில் பிளவுகளை உருவாக்கி ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆட்சி செய்தனர். இந்துக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக நிற்கவில்லை என்றால், சுதந்திரம் கிடைத்திருக்காது. இன்றும், சிலர் தங்கள் சுயநலனுக்காக நமக்கு மத்தியில் பிளவுகளை உருவாக்கி நம்மைப் பிரிக்க முயற்சிக்கிறார்கள்.

பிரிவினைவாத சக்திகளின் சூழ்ச்சிகளுக்கு ஆளாகாமல், நம் நாட்டிற்காக தங்கள் உயிரைக் கொடுத்த நம் முன்னோர்களின் தியாகங்களை நினைவில் கொண்டு நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

WHAT OTHERS ARE READING

Most Popular