மன்னிப்போடு தொடர்புடைய அல்லாஹ்வின் திருநாமங்களில், ‘அல்-அஃபூவ்’ திருநாமம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில், ‘அல்-அஃபூவ்’ என்ற திருநாமத்திற்கு ஆழமான பொருள் உள்ளது. ரமலான் மாதத்தின் கடைசி பத்து இரவுகளில், இந்தத் திருநாமத்தை மையமாகக் கொண்ட ஒரு துஆவை (பிரார்த்தனை) நபி ﷺ அவர்கள் கற்றுக்கொடுத்தார்கள்.
اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ العَفْوَ فَاعْفُ عَنِّي
திர்மிதி # 3513
யா அல்லாஹ்! நிச்சயமாக நீ மன்னிப்பவன் (அல்-அஃபூவ்), மன்னிப்பதையே நீ விரும்புகிறாய், எனவே என்னை மன்னித்தருள்வாயாக.
ஏன் நபி ﷺ அவர்கள் நம்பிக்கையாளர்களை குறிப்பாக ‘அல்-அஃபூவ்’ என்று அழைத்து பிரார்த்திக்குமாறு கற்றுக்கொடுத்தார்கள்? ‘அல்-அஃபூவ்’ திருநாமத்தின் சிறப்பு என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
ஷிர்க்கை கூட ‘அல்-அஃபூவ்’ மன்னிப்பான்
இதற்கான தெளிவான உதாரணங்களில் ஒன்று பனூ இஸ்ரவேலர்களின் வரலாற்றில் காணப்படுகிறது.
அல்லாஹ் அவர்களை ஃபிர்அவ்னிடமிருந்து காப்பாற்றினான். அவர்கள் தங்கள் கண்களுக்கு முன்பாக கடல் பிளந்து அவர்கள் செல்ல வழி தந்ததை கண்டார்கள்.
இவ்வளவு பெரிய அற்புதங்களை பார்த்த பிறகும், அவர்கள் கன்றுக்குட்டியை வணங்கி ஷிர்க் செய்தார்கள்.
இருந்தபோதிலும் அல்லாஹ் அவர்களை மன்னித்தான்.
ثُمَّ عَفَوْنَا عَنكُم مِّن بَعْدِ ذَٰلِكَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ
குர்ஆன் 2:52
அதற்குப் பின்னரும் நீங்கள் நன்றி செலுத்துவதற்காக நாம் உங்களை மன்னித்தோம்.
இதில் வரும் ‘அஃபவ்னா’ (ʿafawnā) என்ற வார்த்தை ‘அல்-அஃபூவ்’ என்ற அதே வேர்ச் சொல்லிலிருந்து வருகிறது. அல்லாஹ்வின் மன்னிப்பின் விசாலத்தையும், அவனுடைய அன்பையும் இது உணர்த்துகிறது.
‘அல்-அஃபூவ்’ என்பதன் பொருள்
அரபு மொழியில் ‘அஃப்வ்’ (ʿafw) என்றால் ஒன்றை முழுமையாக அழிப்பது என்று பொருள். அறிஞர்கள் ‘அஃப்வ்’ என்பது சாதாரண மன்னிப்பை விட மேலானது என்று விளக்குகிறார்கள்.
இமாம் அல்-கஸாலி கூறுகிறார்கள்:
فإن الغفران ينبئ عن الستر، والعفو ينبئ عن المحو، والمحو أبلغ من الستر
அல்-மக்ஸத் அல்-அஸ்னா
மக்ஃபிராஹ் என்பது பாவத்தை மூடி மறைப்பதைக் குறிக்கிறது, ஆனால் அஃப்வ் என்பது பாவத்தை அழிப்பதைக் குறிக்கிறது. மறைப்பதை விட அழிப்பதே மேலானது.
‘அல்-அஃபூவாகிய’ அல்லாஹ், நம் பாவங்களை முற்றிலும் அழித்து விடுகிறான். அந்தப் பாவம் ஒருபோதும் நிகழாதது போல அது ஆகிவிடும்.
அல்லாஹ் என்ன எதிர்பார்க்கிறன்?
அந்த வசனத்தின் இறுதியில் அல்லாஹ் சொல்வதை கவனியுங்கள்.
அதற்குப் பின்னரும் நீங்கள் நன்றி செலுத்துவதற்காக நாம் உங்களை மன்னித்தோம்.
குர்ஆன் 2:52
அல்லாஹ் தரும் மன்னிப்பு நமக்குள் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அல்லாஹ் ஒருவரை மன்னிக்கும்போது:
- உள்ளம் மென்மையடைகிறது.
- நன்றியுணர்வு அதிகரிக்கிறது.
- கீழ்ப்படிதல் எளிதாகிறது.
மன்னிப்பு என்பது ஆன்மீக மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமே தவிர, மெத்தனத்தை அல்ல.
நீங்கள் அல்லாஹ்வின் மன்னிப்பை விரும்பினால்
அல்லாஹ் தான் வழங்கும் மன்னிப்பை, நாம் பிறரை மன்னிப்பதோடு சம்பந்தப்படுத்துகிறான்.
அல்லாஹ் கூறுகிறான்:
وَلْيَعْفُوا وَلْيَصْفَحُوا أَلَا تُحِبُّونَ أَن يَغْفِرَ اللَّهُ لَكُمْ
குர்ஆன் 24:22
அவர்கள் மன்னித்து, விட்டுவிடட்டும். அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பமாட்டீர்களா?
இதில் வரும் ‘வல்யஃபூ’ என்ற வார்த்தையும் ‘அல்-அஃபூவ்’ என்ற வேர்ச் சொல்லிலிருந்து தான் வருகிறது. இது ஒரு அற்புதமான தொடர்பை நாம் கவனிக்க வேண்டும். ‘அல்-அஃபூவின்’ மன்னிப்பை நாம் எதிர்பார்த்தால், நாம் பிறரை மன்னிக்க வேண்டும். எனவே:
- உங்களைக் காயப்படுத்தியவர்கள்.
- உங்களுக்கு அநீதி இழைத்தவர்கள்.
- உங்களுக்கு எதிராகப் பேசியவர்கள்.
இப்படி எல்லோரையும் மன்னித்து விடுங்கள். நீங்கள் பிறரை மன்னிப்பது, அல்லாஹ் உங்கள் பாவங்களை அழிப்பதற்குக் காரணமாக அமையும்.
நம் வாழ்வில் ‘அல்-அஃபூவ்’ திருநாமம்
அல்லாஹ்வை ‘அல்-அஃபூவ்’ என்று அழைத்து பிரார்த்திப்பது நமது வாழ்க்கையில் ஆரோக்யமான செல்வாக்கு செலுத்த வேண்டும்.
அல்லாஹ்வின் இந்தத் திருநாமத்தை நாம் உள்வாங்கி, நீங்கள்:
- வன்மங்களைக் கைவிடுங்கள்.
- வெறுப்புணர்வை அழித்துவிடுங்கள்.
- பிறரின் தவறுகளை கண்டு கொள்ளாமல் அலட்சியம் செய்யுங்கள்
இறைவனின் மன்னிப்பை எதிர்பார்க்கும் ஒரு முஸ்லிம், சகிப்புத்தன்மையோடு நடந்து, பிறரை மன்னிக்கக் கற்றுக்கொள்வார்.
முடிவுரை
‘அல்-அஃபூவ்’ என்ற திருநாமத்தின் ஆழத்தை குர்ஆன் நமக்கு உணர்த்துகிறது. கன்றுக்குட்டி வணங்கி ஷிர்க் செய்த பெரும்பாவத்தைக் கூட ‘அல்-அஃபூவ்’ மன்னித்தான். அல்லாஹ்வின் அன்பிற்கும், கருணைக்கும் ஈடு இணையில்லை.
‘அல்-அஃபூவின்’ மன்னிப்பை எதிர்பார்க்கும் நாம், நமக்கு தீங்கு செய்தவர்களை மன்னிக்க கற்றுக் கொள்ள வேண்டும் என்று குர்ஆன் சொல்கிறது.
உங்கள் பாவங்களை அழிக்குமாறு நீங்கள் அல்லாஹ்விடம் துஆ செய்யும் போது:
எனக்கு தீங்கு செய்தவர்களின் பாவத்தை நான் என் உள்ளத்திலிருந்து அழித்து விட்டேனா என்று உங்களை நீங்களே சுய பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)
‘அல்-அஃபூவ்’ என்பதன் பொருள் என்ன?
அல்-அஃபூவ் என்றால் பாவங்களை முழுமையாக அழிப்பவன், அவற்றின் தடயங்களையும் விளைவுகளையும் நீக்குபவன் என்று பொருள்.
குர்ஆனில் ‘அல்-அஃபூவ்’ எங்கே குறிப்பிடப்பட்டுள்ளது?
குர்ஆன் 2:52 மற்றும் 4:99 போன்ற வசனங்களில் அல்லாஹ் தனது மன்னிக்கும் பண்பை விவரிக்கும்போது இந்த திருநாமத்தை பயன்படுத்துகிறான்.
‘அல்-அஃபூவ்’ என்ற பெயர் எந்த துஆவில் இடம்பெற்றுள்ளது?
லைலத்துல் கத்ர் இரவுக்காக நபி ﷺ அவர்கள் இந்த துஆவைக் கற்றுக்கொடுத்தார்கள்:
اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ العَفْوَ فَاعْفُ عَنِّي
(திர்மிதி # 3513).
முஸ்லிம்கள் ஏன் பிறரை மன்னிக்க வேண்டும்?
அல்லாஹ் தான் வழங்கும் மன்னிப்பை, நாம் பிறரை மன்னிப்பதோடு சம்பந்தப்படுத்துகிறான்.
“அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பமாட்டீர்களா?” (குர்ஆன் 24:22)
