“காஃபிர்” என்பது இழிவான சொல்லா? இந்துக்களை காஃபிர் என்று கூறி குர்ஆன் இழிவுபடுத்துகிறதா?

'காஃபிர்' என்பது இழிவான சொல் அல்ல. 'காஃபிர்' என்பது 'முஸ்லிம்' என்ற வார்த்தையின் எதிர்ச்சொல். 'காஃபிர்' என்றால் இஸ்லாத்தில் நம்பிக்கை இல்லாத நபர் என்று பொருள். எல்லா மதங்களிலும் எதிர்ச் சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, வேதம் அறியாதவர்களையும், வெளிநாட்டவர்களையும் குறிக்க “மிலேச்சர்கள்” என்ற சொல் இந்து மதத்தில் பயன்படுத்தப்படுகிறது.

குர்ஆன் இந்துக்களை காஃபிர்கள் என்று கூறி இழிவுபடுத்துகிறது என்ற தவறான எண்ணம் பலருக்கு உள்ளது. “காஃபிர்” என்றால் என்ன? அது இழிவுக்கு பயன்படுத்தப்படும் சொல்லா?

“காஃபிர்” என்றால் என்ன?

“காஃபிர்” என்பது ஒரு அரபி வார்த்தை.  “முஸ்லிம்” என்ற அரபி வார்த்தையின் எதிர்ச்சொல் தான் “காஃபிர்”.

எல்லா மொழிகளிலும், சொற்களுக்கு எதிர்பதம் உண்டு. உதாரணமாக: வலது, அதன் எதிர்பதம் இடது. அதே போல், “நன்மை” என்ற சொல்லிற்கு எதிர்பதம் தீமை. 

இதேபோல் தான், முஸ்லிம் என்ற சொல்லின்  எதிர்பதம் காஃபிர் என்ற சொல். 

“காஃபிர்” என்பது இழிவான சொல் அல்ல

“காஃபிர்” என்பது இழிவான சொல் அல்ல. “காஃபிர்” என்பது நம்பிக்கையுடன் தொடர்புடைய ஒரு சொல். பிறரை இழிவுபடுத்தும் சொல் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாமைப் போலவே, பிற மதங்களும் தங்கள் மத நம்பிக்கையைப் பின்பற்றாதவர்களைக் குறிக்க சொற்களைப் பயன்படுத்துகின்றன.

பிற மதங்களில் உள்ள சொற்கள்

எல்லா மதங்களிலும் தங்கள் மதத்தைப் பின்பற்றாதவர்களைக் குறிக்க சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த சொற்கள் யாரையும் அவமதிப்பதற்காக பயன்படுத்தப்படுவது அல்ல. மாறாக தங்களின் மத கொள்கையைப் பின்பற்றுபவர்களையும், அதைப் பின்பற்றாதவர்களையும் வேறுபடுத்தி காட்டுவதற்காகப்  பயன்படுத்தப்படுகின்றன.

உதாரணமாக: இந்து மதத்தில், வேதம் அறியாதவர்களையும், வெளிநாட்டவர்களையும் குறிக்க “மிலேச்சர்கள்” என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. அதே போல், யூத மற்றும் கிருஸ்துவ மதங்களில் “இஸ்ரவேல்” அல்லாத மக்களை குறிக்க “ஜென்டைல்ஸ்” அல்லது “புறஜாதிகள்” என்ற சொல்லை பயன்படுத்துகின்றனர்.

இது போன்ற சொற்களை வேறு பல மதங்களிலும் காணலாம்.

  • சீக்கிய மதம்: மன்முக் (கடவுள் பக்தி இல்லாதவர்) / குர்முக் (கடவுள் பக்தி உள்ளவர்)
  • பௌத்த மதம்: ஆர்யன் (அறிவொளி பெற்றவர்) / அனார்யன் (அறியாமையில் உள்ளவர்)
  • சமண மதம்: ஷ்ரவக் (சமண மதத்தைப் பின்பற்றுபவர்) / நாஸ்திக் (சமணக் கோட்பாட்டில் நம்பிக்கை இல்லாதவர்)

மொழிகளிலும் இப்படி சொற்கள் உள்ளன

மொழிகளிலும் இப்படி சொற்கள் உள்ளன. உதாரணமாக, ஆத்திகர் / நாத்திகர். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை நாத்திகர் என்று அழைப்பது, அவர்களை இழிவுபடுத்துவதற்காக அல்ல. அதே போல் தான், தமிழில் இந்தியாவைச் சேராத ஒருவரை “வெளிநாட்டவர்” என்று அழைக்கிறோம். இந்தியாவில் உள்ள எல்லா மாநகரங்களிலும் “வெளிநாட்டவர் பதிவு அலுவலகம்” உள்ளது. இந்தியாவில் வாழும் அமெரிக்கரோ அல்லது ஜப்பானியரோ, இந்தியர்கள் தங்களை “வெளிநாட்டவர்” என்று அழைத்து இழிவுபடுத்துகிறார்கள் என்று நினைத்தால் அது சரியா? இல்லை அல்லவா! அதே போல் தான் “காஃபிர்” என்ற சொல்லும். “முஸ்லிம்” என்ற சொல்லின் எதிர்பதமாக அது பயன்படுத்தப்படுகிறதே தவிர, அது யாரையும் இழிவுபடுத்த பயன்படுத்தப்படவில்லை.

“முஸ்லிம்” மற்றும் “காஃபிர்” என்ற வார்த்தைகளின் அர்த்தங்களை இப்போது புரிந்து கொள்வோம்.

முஸ்லிம் மற்றும் காஃபிர் என்ற வார்த்தைகளின் அர்த்தங்கள்

கீழே சொல்லப்படும் விஷயங்களை முழுமையாக நம்பும் ஒருவரை குறிக்க “முஸ்லிம்” என்ற சொல் பயன்படுத்தப்படுத்தபடுகிறது.

  1. கடவுள் ஒருவனே 
  2. கடவுளுக்கு எந்த தேவையும் இல்லை. அவனுக்கு யாருடைய உதவியும் தேவையில்லை. 
  3. கடவுளுக்கு பெற்றோர்களோ, குழந்தைகளோ இல்லை.
  4. கடவுள் பிறப்பு, இனம் அல்லது சாதி அடிப்படையில் பாகுபாடு காட்டுவதில்லை.
  5. கடவுளுக்கு தூக்கம், நோய், ஞாபக மறதி போன்ற எந்த பலவீனமும் இல்லை.
  6. கடவுளுக்கு நிகரானவர் யாரும் இல்லை.
  7. உலகில் மனிதன் செய்யும் செயல்களுக்கு தீர்ப்பளிக்க கடவுள் ஏற்படுத்தியிருக்கும் மரணத்திற்குப் பின் ஒரு வாழ்க்கை உள்ளது. நல்லவர்கள் சொர்க்கத்திற்கும், தீயவர்கள் நரகத்திற்கும் செல்வார்கள்.
  8. மனிதர்களுக்கு வழிகாட்டியாக அனுப்பப்பட்ட குணசீலர்களே இறைத்தூதர்கள்.

“முஸ்லிம்” என்ற சொல்லிற்கு எதிர்பதம் “காஃபிர்” என்பதால், மேலே உள்ள எட்டு விஷயங்களில் நம்பிக்கை இல்லாத ஒருவரை குறிக்க “காஃபிர்” என்று சொல் பயன்படுத்தப்படுகிறது.

இந்துக்கள் உட்பட அனைத்து மனிதர்களும் கண்ணியத்திற்கு உரியவர்கள்

இறைவன் குர்ஆனில் கூறுகிறான்:

“நிச்சயமாக, நாம் (இறைவன்) ஆதமுடைய சந்ததியைக் கண்ணியப்படுத்தினோம்.”

குர்ஆன் 17:70

முழு மனிதகுலமும் ஆதமின் பிள்ளைகள் என்றும், நாம் அனைவரும் ஒரே “மனித குடும்பத்தை” சேர்ந்தவர்கள் என்றும் இஸ்லாம் போதிக்கிறது. முழு மனிதகுலத்தையும் இறைவன் கண்ணியப்படுத்தியுள்ளான். இதில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இந்துக்களும் அடங்குவர். இந்துக்களை மட்டும் இழிவுபடுத்தும் பேச்சுக்கே இங்கு இடமில்லை.

‘காஃபிர்’ என்று அழைக்க வேண்டாம்

இந்தியாவின் மிகவும் பழமையான செல்வாக்கு மிக்க இஸ்லாமிய அமைப்பான ‘ஜாமியத் உலமா-இ-ஹிந்த்’, இந்துக்களை ‘காஃபிர்’ என்று அழைக்கக் கூடாது என்று சொல்லியுள்ளது. ‘காஃபிர்’ என்ற சொல் இழிவானது அல்ல என்றாலும், இரு சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தையும், புரிதலையும் ஊக்குவிக்க, அதைத் தவிர்க்க வேண்டும் என்று அது கூறியுள்ளது.

https://timesofindia.indiatimes.com/india/hindus-cant-be-dubbed-kafir-says-jamiat/articleshow/4179187.cms

காஃபிர்' என்ற சொல்லின் அர்த்தம் இஸ்லாத்தைச் சேராத ஒருவர் என்பதே. ஆனால்,காஃபிர்’ என்று சொல்வது யாரையாவது புண்படுத்தினால், அந்த வார்த்தையைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

அப்துல் ஹமீத் நூமானி, ‘ஜாமியத் உலமா-இ-ஹிந்த்’

‘காஃபிர்’ என்று சொல்ல வேண்டாம் – இந்தோனேசிய இஸ்லாமிய அமைப்பு

இஸ்லாமிய நாடான இந்தோனேசியா, உலகில் அதிகமான முஸ்லிம் மக்கள்தொகையைக் கொண்டுள்ளது. இந்தோனேசியாவின் மிகப்பெரிய இஸ்லாமிய அமைப்பான நஹ்தலத்துல் உலமா (NU), முஸ்லிம் அல்லாதவர்களைக் குறிக்க ‘காஃபிர்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது.

https://www.thejakartapost.com/news/2019/03/01/nu-calls-for-end-to-word-infidels-to-describe-non-muslims.html

‘காஃபிர்’ என்ற வார்த்தை முஸ்லிம் அல்லாத சிலரை புண்படுத்துகிறது. தேசத்தை கட்டியெழுப்புவதில் பங்கேற்கும் சக இந்தோனேசிய குடிமக்களை ‘காஃபிர்’ என்று முத்திரை குத்துவது சரியல்ல.

அப்துல் மொக்சித் கசாலி, தலைமை இமாம்

ஒரு “முஸ்லிம்” கூட காஃபிராக இருக்கலாம்

“முஸ்லிம்” மற்றும் “காஃபிர்” ஆகிய இரண்டு வார்த்தைகளும் மக்கள் செய்யும் செயல்களுடன் தொடர்புடையவை. எனவே, அந்தச் செயல்களைச் செய்பவருக்கு மட்டுமே அவற்றைப் பயன்படுத்த முடியும். எனவே, ஒருவர் கடவுளின் கட்டளைகளை நம்புவதன் மூலமும், கடவுளுக்கு கீழ்ப்படிவதன் மூலமும் தான் அவர் முஸ்லிம் ஆகிறார்.

முஸ்லிம் குடும்பத்தில் பிறந்ததாலோ அல்லது சுல்தான், ஷேக் போன்ற “முஸ்லிம்” பெயரைக் கொண்டிருப்பதாலோ ஒருவர் முஸ்லிம் ஆகிவிட முடியாது. ஒருவருக்கு முஸ்லிம் பெயர் இருக்கலாம், ஆனால் அவருக்கு கடவுள் நம்பிக்கையில்லை எனில் அவர் காஃபிராக ஆகிவிடுவார்.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“யார் வேண்டுமென்றே தொழுகையை விட்டுவிடுவாரோ (தொழுகை என்ற கடமையை நிராகரித்து, திருந்தாமல் இருப்பவர்), அவர் “காஃபிர்” ஆவார்.”

சமூகத்தில் “முஸ்லிம்கள்” என்று கருதப்படுபவர்களை நோக்கித் தான் முஹம்மது நபி அவர்கள் இதைக் கூறினார்கள். இதிலிருந்து, “காஃபிர்” என்ற சொல் முஸ்லிம் அல்லாதவர்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் சொல் அல்ல என்பதையும், யாரையும் இழிவுபடுத்த சொல்லப்படும் சொல் அல்ல என்பதையும்  நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

முடிவுரை

இஸ்லாம் அமைதியையும், நீதியையும் போதிக்கிறது. முஸ்லிம் அல்லாதவர்களிடம் நீதமாகவும், அன்போடும் நடந்துக் கொள்ள குர்ஆன் கட்டளையிடுகிறது. காஃபிர் என்ற சொல், யாரையும் இழிவுப்படுத்த சொல்லப்படும் சொல் அல்ல என்பதைப் புரிந்து கொண்டால், நமக்கு மத்தியில் சிறந்த நல்லிணக்கம் ஏற்படும்.

WHAT OTHERS ARE READING

Most Popular